தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு குளித்துக் கொண்டிருந்த போது பரிதாபம்

பேட்டை,
தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பாலிடெக்னிக் மாணவர்
நெல்லை டவுன் முகம்மது அலி தெருவைச் சேர்ந்தவர், நூர் முகம்மது. அவருடைய மகன் முகம்மது அசாருதீன் (வயது 19). இவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக் பாடப்பிரிவில் 2-வது ஆண்டு படித்து வந்தார்.
அவருடைய நண்பர்கள் பேட்டையைச் சேர்ந்த பீர் மைதீன் (17), முகம்மது பைசல் (18), டவுன் கோடீசுவரன் நகரைச் சேர்ந்த ஆசிக் (16), டவுனைச் சேர்ந்த ஜோயல் (17), மற்றும் சரவணன் (18). இவர்கள் 5 பேரும், தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதி விடுமுறையில் உள்ளனர்.
குளிக்கச் சென்றனர்
நேற்று மாலையில் 6 பேரும் சுத்தமல்லியை அடுத்த பழவூர் பகுதி, தாமிரபரணி ஆற்றுக்கு சென்றனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பாலிடெக்னிக் மாணவர் முகம்மது அசாருதீன், ஆழமான பகுதிக்கு சென்றார். திடீர் என்று அவர் தண்ணீரில் தத்தளித்தார். ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முகம்மது அசாருதீன்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களும் தண்ணீரில் தத்தளித்தனர். எனவே தங்களை காப்பாற்றும்படி கூச்சல் போட்டனர்.
பரிதாப சாவு
இந்த சத்தம் கேட்டு, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், மாணவர் முகம்மது அசாருதீன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் காப்பாற்றப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆற்றில் மூழ்கி பலியான மாணவர் முகம்மது அசாருதீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குளிக்கச் சென்ற மாணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment