‘முஸ்லிம்கள் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடுபடுவோம்’ என்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் புதிய மாநில தலைவர் முகமது இஸ்மாயில் கூறினார்.

வரவேற்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் தேனியில் நடைபெற்றது. இதில் மாநில தலைவராக மேலப்பாளையத்தை சேர்ந்த எம்.முகமது இஸ்மாயில், துணைத் தலைவராக ஹாலித் முகமது, பொதுச் செயலாளராக முகமது ஷேக் அன்சாரி, செயலாளர்களாக முகமது ரசீன், நெல்லையை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர், பொருளாளராக இப்ராகீம் பாதுஷா உள்ளிட்டோர் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் நேற்று நெல்லைக்கு வந்தனர். அவர்களுக்கு, மாவட்ட தலைவர் அகமது நவவி, மாவட்ட செயலாளர் இத்ரீஸ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தார்கள்.

அப்போது மாநில தலைவர் முகமது இஸ்மாயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

முஸ்லிம்கள் முன்னேற்றம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு 18–க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வலுவான கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அனைத்து தரப்பு மக்களின் சம உரிமைக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

குறிப்பாக மிகவும் பின் தங்கி உள்ள சமூகமாக இருக்கக்கூடிய முஸ்லிம் சமூகத்தை அனைத்து வகையிலும் மேம்படுத்தக் கூடிய, வலிமைப்படுத்தக் கூடிய பணியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. எங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள 2 ஆண்டு பதவி காலத்தில், தமிழகத்தில் முஸ்லிம்கள் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடுபடுவோம்.

அரசியல் செயல்பாடு

அரசியல் ரீதியாக பா.ஜனதா கட்சிக்கு எதிரான, மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து வருகிறோம். கடந்த தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் சேர்ந்து செயல்படும் திட்டம் தோல்வி அடைந்து விட்டது. அந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இவ்வாறு மாநில தலைவர் முகமது இஸ்மாயில் கூறினார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment