நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே மாணவனுடன் காதல் வயப்பட்ட ஆசிரியை பள்ளி நிர்வாகம் எச்சரித்தும், இருவரும் கண்டு கொள்ளாததால் பணியில் இருந்து ஆசிரியையை நீக்கப்பட்டதோடு, உறவினர்களின் நெருக்கடி அதிகமானதால் இருவரும் வீட்டை விட்டு ஓடியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்தவர் கேசரி மகள் கோதைலட்சுமி என்ற பிரியா (23). எம்எஸ்சி பட்டதாரியான இவர், தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இப்பள்ளியில் கடையநல்லூரைச் சேர்ந்த 15 வயது மாணவர் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.  கடந்த சில மாதங்களாக அந்த ஆசிரியையும், மாணவனும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி திடீரென இருவரும் மாயமாகி விட்டனர். இதுகுறித்து செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் காவல் நிலையங்களில் இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இருவரது காதல் விவகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், கோதைலட்சுமி மாணவனோடு காதல் வயப்பட்டதால், விதவிதமான போட்டோக்களை எடுத்து வைத்துள்ளார். மேலும் மாணவனின் அழகில் மயங்கி அவரோடு அடிக்கடி பேசி கொண்டிருந்ததோடு, அவரை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றதால் பள்ளி நிர்வாகம் அவரை எச்சரித்துள்ளது. அதை இருவரும் கண்டு கொள்ளாததால் சில தினங்களுக்கு முன்பு கோதைலட்சுமியை பணியில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியது.

ஆனால், பள்ளி நிர்வாகம் இதுகுறித்த தகவல்களை மாணவனின் பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. மாணவனின் தந்தை வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும் சூழலில், தனது மகனின் நடத்தை பற்றிய தகவல்கள் அவருக்கு போய் சேரவில்லை. இந்நிலையில் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டாலும், மாணவனுடனான நட்பை ஆசிரியை கோதை லட்சுமி தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளார்.

மாணவன் 10ஆம் வகுப்பு தேர்வுகளை முழுமையாக எழுதட்டும் என இருவரும் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு தேர்வுகள் மட்டுமே எழுதி முடித்த நிலையில், உறவினர்கள் நெருக்கடி காரணமாக மாயமாகி விட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவத்தால் இருவரது குடும்பத்தினரும், அவர்களது உறவினர்களும் தற்போது தவிப்பில் உள்ளனர். இதுகுறித்து புகார் அளித்த மாணவர் குடும்பத்தினர் தற்போது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது. இதற்கிடையில், மாணவரும், ஆசிரியையும் சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன் தலைமையிலான தனிப்படையினர் மாயமான மாணவரை தேடி அங்கு விரைந்துள்ளனர்.

இதனிடையே, மாணவன் ஆசிரியையோடு மாயமான இந்த சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள் வாட்ஸ் அப்பில் பரவிய வண்ணம் உள்ளன. முதல் நாள் சம்பந்தமில்லாத இருவரது படங்கள் மாணவன், டீச்சர் எனக்கூறி தமிழகம் முழுவதும் உலா வந்தன. அந்த படங்களை பார்த்து பலர் உண்மை என நம்பினர். அதன் தொடர்ச்சியாக நேற்று மாணவனையும், ஆசிரியையையும் வெட்டிக் கொலை செய்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த வேறொரு கொலை சம்பவம் குறித்த படங்களை வாட்ஸ் அப்பில் வெளியிட்டனர். அதையும் பலர் நம்பி ஏமாந்து விட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment