சென்னை: காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெறும் என்று அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு நாளில் சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இன்றும் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:

காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே நோக்கம். அதை நிறைவேற்ற சக்தி வாய்ந்த பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம்.
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணிக்கான பேச்சு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 4ந் தேதி நடைபெறம் கட்சி பொதுக் குழுவில் கூட்டணி பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.




துரோகம் செய்யாது பாஜக

கூட்டணியில் சேருவது தொடர்பாக நிபந்தனை எதுவும் விதிக்கப்படவில்லை. அப்படி நிபந்தனை விதிக்கும் நோக்கம் பாரதிய ஜனதாவுக்கும் கிடையாது என உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே கூட்டணி வைக்க முடிவு செய்தோம்.
ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை பாரதிய ஜனதா செய்யாது என நம்புகிறோம். ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவதற்காகவே இந்த கூட்டணி.

மோடி அலை வீசுகிறது

நாடு முழுவதும் மோடி அலை வீசுவது உண்மை. மோடி நிச்சயம் பிரதமராவார். லோக்சபா தேர்தலில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.மதிமுக.,வின் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய 4 பேர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நான் மேற்கொண்ட பயணத்தின் போது கிராமங்களில் மக்களிடம் நல்லதொரு வரவேற்பு இருந்தது. மக்களின் கவனம் மதிமுக பக்கம் திரும்பி உள்ளது. மக்களின் இந்த வரவேற்பு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது;

அதிமுகவுடன் கூட்டணி இல்லை

சுயமரியாதை கருதி சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம்; கொள்கைக்கு புறம்பாக மீண்டும் அத்தகையதொரு உடன்பாடு ஏற்பட வேண்டும் என நானோ எனது கட்சி தொண்டர்களோ ஒரு போதும் விரும்பவில்லை.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment